பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா நடந்தது. குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊரணி வடகரை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 2 தினங்களாக சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூச நாளான நேற்று காலை கணபதி, சுப்ரமணியர், துர்கா, லட்சுமி, நவக்கிர ஹோமங்களுக்கு தீபாராதனை நடந்தது.
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில், நடந்த தைப்பூச விழாவில் பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு ஹோமம், அபிஷேகம் நடந்தது. மாலையில் பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகன் மயில் வாகனத்தில் வீதியுலா வந்தார். பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் உள்ள, சக்தி குமரன் கோயிலில், சிறப்பு அபிஷேகத்துடன், முருகன் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் மேலவலசை கிராமத்தில் உள்ள பால சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைபூசத்தை முன்னிட்டு விபூதி, மலர் அலங்காரத்தில் மூலவர் பால சுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 18 வகையான அபிஷேக, ஆராதனைகளுடன், சண்முக கவசம் உள்ளிட்ட பக்தி பாடல்கள் பாடப்பட்டன.ஏற்பாடுகளை பூஜகர் நாகநாதன், அறங்காவலர் எஸ்.நாகநாதன், ஊர்த்தலைவர் செல்லச்சாமி, கதிரேசன், விஜயகுமார், அன்னை தெரசா மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
மண்டபம்: காந்தி நகர் சண்முக சடாச்சர முருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம வடிவேல் முருகன் கோயில், குயவன்குடி சாது சுப்பையா கோயில்களில் நடந்த தைப்பூச விழாக்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நன்கொடையாளர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை முருகன் கோயிலில் நடந்த தைபூச திருவிழாவில் முருகனுக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம்: தைப்பூச விழா யொட்டி நேற்று, ராமேஸ்வரம் திருக்கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் பல்லாக்கில் புறப்பாடாகி, லட்சுமனேவர் தீர்த்த கோயிலில் எழுந்தருளினர். அங்கு பக்தர்களுக்கு தீர்த்த வாரி உற்சவம் முடிந்ததும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, தீர்த்த குளத்தில் அலங்கரித்த தெப்பத்தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், கூடியிருந்த பக்தர்கள் வடத்தை இழுத்து, 11 முறை தெப்பத்தை சுற்றி வந்தனர். பின், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி, வீதி உலா வந்து கோயிலை அடைந்தனர். இதில், கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.