பழநியில் தைப்பூச விழா தெப்ப உற்சவத்துடன் நாளை நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2015 10:02
பழநி: பழநி தைப்பூச விழா நாளை பெரியநாயகியம்மன்கோயில் தெப்ப உற்சவத்துடன் 10 நாள் திருவிழா நிறைவடைகிறது. ஜன.,28ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன்கோயிலில் முத்துகுமராசுவாமி, வள்ளிதேவசேனா சமேதராக காலை 9 மணிக்கு மேல் தந்தப்பல்லக்கில் திருவுலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
நேற்று இரவு 8மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். வையாபுரிக் கண்மாயில் வாணவேடிக்கை நடந்தது. தெப்ப உற்சவத்துடன் நிறைவு: விழாவின் 9ம்நாளான இன்று காலை 9 மணிக்கு முத்துகுமாரசுவாமி புதுச்சேரி சப்பரத்தில் திருவுலா வந்து, பெரியநாயகியம்மன் கோயில் துறையூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி ரதவீதி திருவுலா வருதல் நடக்கிறது.
விழாவின் பத்தாம் நாளான பிப்.6ல் (நாளை) காலை 9 மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள், தெப்ப உற்சவ விழா நடக்கிறது. இரவு 11.30 மணியளவில் பெரியநாயகியம்மன்கோயிலில் கொடி இறக்குதலுடன் தைப்பூச விழா முடிவடைகிறது.