பதிவு செய்த நாள்
07
பிப்
2015
01:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காமாட்சியம்மன் மற்றும் தேவாதியம்மன் ஆறாம் ஆண்டு ஆராதனை விழாவையொட்டி, சுமங்கலி மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி நகர, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில், காமாட்சியம்மன் மற்றும் தேவாதியம்மன் ஆறாம் ஆண்டு ஆராதனை விழா நேற்று துவங்கியது.
விழாவையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு, காட்டு வீர ஆஞ்சநேயருக்கு, 1,008 வடைமாலை சாத்துதல் நிகழ்ச்சியும், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும் நடந்தது. அதைத்தொடர்ந்து, 7 மணிக்கு, வெங்கட்ரமண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 8.30 மணிக்கு, பழையபேட்டையில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில், அர்ச்சனை வழிபாடும் நடந்தது.
இதன் பின்னர், ராயப்ப முதலி தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில், முத்து விநாயகர் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜையும், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் மா விளக்கு பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.