பதிவு செய்த நாள்
09
பிப்
2015
11:02
பொன்னேரி: பொன்னேரி, பொன்னியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரி- திருவொற்றியூர் சாலை, திருவேங்கிடபுரத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், புதிய கட்டுமானங்களுடன் கோவில் புனரமைப்பு பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. விநாயகர், முருகன், நவரக்கிரகங்கள் என, தனித்தனி சன்னிதிகளுடன் கோவில் அமைக்கப்பட்டன. கட்டுமான பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. நான்காம் கால யாக பூஜை, காலை 6:00 மணிக்கும், விநாயகர் மற்றும் முருகர் சன்னிதிகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் காலை 8:15 மணிக்கும் நடைபெற்றது.
மேலும், காலை 8:30 மணிக்கு, மூலவர் பொன்னியம்மன் வீற்றிஇருக்கும் சன்னிதி கோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திரளாக கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தீபாராதனை, மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர். மாலையில், பொன்னியம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.