பதிவு செய்த நாள்
09
பிப்
2015
11:02
ஆர்.கே.பேட்டை: வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை, ஸ்ரீகாளிகாபுரத்தில் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் அண்ணா தெருவில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கிராமவாசிகளின் பங்களிப்புடன், கோவில் சீரமைப்பு பணிகள், கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்தன. பணிகள் முடிவடைந்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று காலை புதிய சிலைகள் கரிக்கோல ஊர்வலம் வந்தன. நேற்று, காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, புனிதநீர் கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின், மூலவர் வரசித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகர் மற்றும் துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கும் கலச அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5:30 மணிக்கு, முருகர் திருக்கல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்து, விநாயகர், முருகர் வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.