பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
சேலம் : சேலம், அம்மாபேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், நேற்று நடந்த மஹா சண்டி ஹோமத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சேலம், அம்மாப்பேட்டை, குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், துர்க்கையம்மன் வார வழிபாடு நண்பர்கள் குழுவின், 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மஹா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன், ஹோமம் துவங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று, 16 வகையான அபிஷேக திரவியங்கள் கலந்த கலசங்கள் மலைமேல் வலம் வந்தன. தொடர்ந்து, சண்டிகா பரமேஸ்வரி நவாவரண பூஜை, சப்தசதி பாராயணம், மேதாஸூக்தம், லட்ச மூல மந்த்ர ஜபம் இணைந்த, சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி யாக விழா மற்றும் மஹா சண்டி ஹோமம் ஆகியவை நடந்தது.மாலையில், வசோத்தாரா மஹா பூர்ணாஹூதி, துர்க்கையம்மனுக்கு மங்கள தீர்த்தபாபிஷேகம், ராகு கால பூஜை ஆகியன நடந்தது.ஹோமத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.