பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
அரியலூர்: திருமழபாடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, திருமபாடி கொள்ளிடக்கரையில், சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத ஸ்வாமி கோவில் உள்ளது. 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் உள்ளிட்ட மூவரால் தேவாரம் பாடப்பெற்ற தலம். 11 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலின் கருவறை, விமானம், மகா மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், அலங்கார மண்டபம், திருமுற்றம், திருக்குளம், திருமதில், திருமாளப்பத்தி, ராஜ கோபுரம் உள்ளிட்ட இடங்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடை மூலம் திருப்பணி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, நேற்று காலை, கும்பாலிஏஷகம் நடைபெற்றது. திருப்பனந்தாள் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சாமிகள் முன்னிலையில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஸ்வாமி, அம்பாள் கோபுரம் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நிறைவு செய்தனர். 15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் கல்யாணி, அரியலூர் உதவி ஆணையர் சுரேஷ், கோயில் நிர்வாக அலுவலர் மணி, உதவி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, எம்.எல்.ஏ., துரை மணிவேல், தாசில்தார் வைத்தியநாதன், திருமானூர் பஞ்., யூனியன் முன்னாள் சேர்மன் குமார் என்ற நடராஜன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.