பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
காங்கேயம் : சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தெப்பக்குளத்தில், கடந்த, 85 ஆண்டுகளுக்குப்பின், இரண்டாவது ஆண்டாக நேற்று, பரிவேட்டை தெப்ப உற்சவ விழா நடந்தது.
காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணி ய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 25ம் தேதி வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த, 3 முதல், 5ம் தேதி வரை, 3 நாட்கள் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். மலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான நந்தவன தோட்டத்தில், உள்ள தெப்பக்குளம் தனியார் வசம் இருந்து, கடந்த ஆண்டு மீட்கப்பட்டது. 85 ஆண்டுகளுக்குப்பின், தெப்பக் குளத்தில், தெப்ப உற்சவம், கடந்தாண்டு முதல் முறையாக நடந்தது. அதேபோல நேற்று, இரண்டாவது ஆண்டாக குளத்தில் பரிவேட்டை, தெப்ப உற்சவம் நடந்தது.சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, குளத்தில் தெப்பம் விடப்பட்டது. தைப்பூசத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், வரும், 12ம் தேதி வரை நடக்கிறது.