பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
சிவகாசி : திருத்தங்கல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்காக புதுப்பிக்கப்பட்டு, வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா கணபதிஹோமத்துடன் துவங்கி முதல், இரண்டாம், மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. முன்னதாக பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து சேகரித்து வந்த தீர்த்தம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று நான்காம் கால பூஜைகள் மகா தீபாராதனையுடன் துவங்கி யாத்ராதானம், கும்பம் புறப்பாடு முதல் விமான கலசத்திற்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், துர்க்கையம்மன், கருப்பசாமி, காளியம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். கும்பிஷேக ஏற்பாடுகளை திருப்பணியாளர் ராஜப்பன் தலைமையில், திருத்தங்கல் இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் பாக்கியம், செயலாளர் ராமர், பள்ளிகளின் தாளாளர் கணேசன், பொருளாளர் மாணிக்கம், துணை தலைவர் குருசாமி, துணைச்செயலாளர் சத்திய மூர்த்தி, தர்மகர்தா சவுரிராஜன், நிர்வாக குழுவினர் செய்தனர்.
காரியாபட்டி: காரியாபட்டி கோவில்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.
சேத்தூர்-மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கும்ப கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.