பதிவு செய்த நாள்
09
பிப்
2015
05:02
தங்கவயல்: பக்தி முழகத்துடன், கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் "ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று (9.2.15) நடந்தது. கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில், 2வது கும்பாபிஷேக பூஜைகள், கடந்த 7ம் தேதி ஆரம்பமானது. 8ம் தேதி மஹாகணபதி, சுப்பிரமணியர், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஆஞ்சநேய ஹோமம் நடந்தது.
நேற்று (9.2.15) காலையில், பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்
கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சந்திர ஹோமம், அம்பாள், பரிவார மூர்த்திக்கு பிராண பிரதிஷ்டை, வாசவி ஹோமம், ருத்ர ஹோமத்துக்கு பின்னர், மஹா பூர்ணாஹூதி நடந்தது.
யாகசாலை பூஜைகளை, நஞ்சுண்ட தீட்சித் நடத்தினார். கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்த, கர்நாடகா மாநிலம் ஹரிஹரபுரா ஆதிசங்கராச்சார்யா சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் "பரமபூஜ்ய ஸ்ரீமத் ஜெகத்குரு சங்கராச்சார்யா ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹா சுவாமிகள், கன்னிகா பரமேஸ்வரியின் மகிமையை எடுத்துரைத்தார். "சக்தியின் மறு
அம்சம் என்று குறிப்பிட்டார்.
பகல் 12 மணியளவில், புனித நீர் அடங்கிய கலசங்கள், விமான கோபுரம், ராஜகோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. பகல் 12.13 மணியளவில், மஞ்சள் கொடியை அசைக்க, விமான கோபுரத்துக்கு, "பரமபூஜ்ய ஸ்ரீமத் ஜெகத்குரு சங்கராச்சார்யா ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹா சுவாமிகள் புனித நீர் ஊற்றினார். அதே நேரத்தில், ராஜகோபுரத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
விநாயகர், நகரேஸ்வரர், லட்சுமி நாராயணர், வள்ளி தேவசேனா சுப்ரமண்யர் கோபுரத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டதால் மெய் சிலிர்த்தனர்.
பின்னர், அம்பாளுக்கு, சுவாமிகள் மஹா அபிஷேகம் செய்தார். இதே போன்று, ஆலயத்திலுள்ள மற்ற விக்ரஹங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்துக்கு பின்னர், மஹா மங்களார்த்தி காண்பிக்கப்பட்டது.
இரவில் வாண வேடிக்கைகளுடன், கன்னிகா பரமேஸ்வரி, வீதி உலா வந்தார். விழாவில், மறைந்த அஸ்வத் நாராயண செட்டி குடும்பத்தினர், கோதண்டராம செட்டி, சந்திரசேகர ரெட்டி, சீனிவாஸா, சங்கரநாராயண செட்டி, ஆர்ய வைஸ்ய மண்டலியினர், ஆர்ய வைஸ்ய மஹிளா மண்டலி, ஆர்ய வைஸ்ய யுவஜன சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.