800 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் திருப்பணியில் மெத்தனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2015 12:02
உத்தமபாளையம் : உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணி வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உத்தமபாளையத்தில் 800 ஆண்டுகள் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான யோக நரசிங்க பெருமாள் கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலில் திருப்பணிகள் செய்ய ஓம் நமோ நாராயாணா பக்த சபையினர் முடிவு செய்தனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கோயிலில் விக்கிரகங்கள் எடுத்து வைக்கப்பட்டது. திருப்பணிகள் செய்வதற்கு பல உபயதாரர்கள் முன் வந்தனர். பெருமாள் சன்னதியை இடித்து விட்டு கற்களை எடுத்து புதிதாக மண்டபம் கட்டுதல் முன்பகுதியில் அலங்கார தோரண வாயில்கள், ராஜகோ புரம், ஆண்டாள் கோயில் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ள மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது.
கடந்த நவம்பரில் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் பணிகள் துவங் கியது. பணிகள் துவங்கினாலும் பல பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கலசத்தை எடுத்தால் தான் கோபுரம் கட்ட முடியும். அதற்கு செயல்அலுலர் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார். கொடிக்கம்பம் அமைக்க, மடப்பள்ளி கட்ட இடம் ஒதுக்கி அனுமதி தர வேண்டும். கோபுரம் கட்டுவதற்கு கரூரில் இருந்து வந்த ஸ்தபதி மற்றும் பணியாளர்கள் கலசங்களை எடுக்க கோயில் நிர்வாகம் இழுத்தடித்ததால் திரும்பி சென்றுவிட்டனர்.இதனால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.திருப்பணிகள் செய்ய உபயதாரர்கள் முன்வந்தபோதும் அறநிலையத்துறையின் இந்த போக்கிற்கு காரணம் தெரியவில்லை. இதனால் கோயில் திருப்பணி செய்ய வரும் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர், பெருமாள் கோயில் திருப்பணியை தடையின்றி நடத்த உத்தரவிட வேண்டும்.