நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்கத்திருவிழா வரும் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ம் தேதி தூக்க நேர்ச்சை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டுபவர்களும், குழந்தைகளின் ஆராக்கியமான வாழ்க்கைக்கும் பெற்றோர் இங்கு குழந்தைகளை இங்கு தூக்க மரத்தில் ஏற்றுகின்றனர்.
பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் இங்கு தூக்கத்திருவிழா நடைபெறும். 60 அடி உயரம் கொண்ட தூக்கமரத்தில் தூக்கக்காரர்களின் கைகளில் குழந்தைகளை கொடுத்து கோயிலை வலம் வருவது தூக்க நேர்ச்சையாகும். இந்த ஆண்டு தூக்கத்திருவிழா வரும் 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கேரள அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தினமும் விழாவில் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 23-ம் தேதி காலை ஆறு மணி முதல் தூக்க நேர்ச்சை நடைபெறும். அன்று விடிய விடிய இந்த நிகழ்ச்சி நடைபெறும்.