பதிவு செய்த நாள்
05
மார்
2015
10:03
கோவை : கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. கோவை, கோனியம்மன் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை, குதிரை வாகனங்களில், கோனியம்மன் எழுந்தருளி, நகர வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை, 5:00 மணிக்கு, ராஜவீதி தேர்நிலைத்திடலில், அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள், தேர் சக்கரங்களுக்கு, உப்பு, மிளகு கொட்டியும், தண்ணீர் ஊற்றியும் வழிபட்டனர்.கோனியம்மன் தேர், 70 அடி உயரத்திற்கு, பல வண்ண காகிதங்கள், கலசத்தால், அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு மஞ்சள் நிறபட்டு உடுத்தி, ரோஜா, மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். மதியம், 2:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், நாகசக்தி அம்மன் பீடம் சிவசண்முக பாபுஜி, அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக சென்ற தேர், மீண்டும் தேர்நிலைத்திடலை அடைந்தது. மாநகர வீதியில், ஆடி அசைந்து வந்த தேரில் எழுந்தருளிய அம்மனை, பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபட்டனர்.
40 ஆண்டுக்கு பிறகு : கோவை கோனியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா மாசி மாதத்தில் நடப்பது வழக்கம். ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் திருவிழா அரங்கேற்றும். ஆனால், இரண்டு தேரோட்ட நிகழ்வுகளும் நேற்று ஒரே நாளில் நடந்தது.