பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
புதுச்சேரி: மாசிமக தீர்த்தவாரியில், பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால், வைத்திக்குப்பம் கடற்கரை களைகட்டியது.
வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக, தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர், செஞ்சி அரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் ஸ்ரீனிவாசப் பெருமாள், தீவனுார் ஆதிநாராயணப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் சுவாமிகள் புதுச்சேரி வந்துள்ளனர்.மேலும், புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்திருந்தனர். கடற்கரையில் எழுந்தருளிய நுாற்றுக்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்து, பக்தர்களின் தரிசனத்திற்காக கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். கடலில் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடற்கரை களைகட்டியது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் பூத் அமைக்கப்பட்டு, மைக்கில் விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சிறப்பு அதிரடி போலீசார், பைனாக்குலர் மூலம் கண்காணித்தனர். வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுவாமிகள், புதுச்சேரியில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாசிமக உற்சவத்தையொட்டி, பல்வேறு இடங்களில், அன்னதானம், மோர் வழங்கப்பட்டது. தினமலர் நாளிதழ் சார்பில், விநாயகர், முருகர், குபேரர் படங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
வீணடிக்கப்பட்ட உணவு: மாசிமக திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பசியாறும் நோக்கத்தில், பல்வேறு அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், நிறுவனங்கள் சார்பில், காந்தி வீதி, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, வைத்திக்குப்பம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு, வாங்கி சாப்பிட்டனர். பெரும்பாலானவர்கள், ஒவ்வொரு இடத்திலும் வழங்கப்பட்ட தயிர், புளியோதரை, பொங்கல், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்டவைகள் வாங்கி முழுமையாக சாப்பிடாமல், டேஸ்ட் மட்டும் பார்த்துவிட்டு, கீழே வீசிவிட்டு சென்றனர். இப்படியாக, பல இடங்களில் உணவுகள் கீழே கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டது. நல்ல நோக்கத்துக்காக வழங்கப்பட்ட உணவு வீணாக்கப்பட்டது, பலரையும் மன வேதனையடைய செய்தது. இதுபோன்று, உணவை வீணடிக்காமல் இருந்தால், பசியுடன் வரும் மற்றவர்கள் பயன்பெறுவர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.