துவாரகையில் உள்ள கண்ணபரமாத்வே தக்கோர் என்றழைக்கப்படும் டங்கபுரத்திலும் கோயில் கொண்டுள்ளார். அது குறித்து ஒரு சம்பவம் உண்டு. விஜய சிம்மன் என்ற பக்தரின் கனவில் தோன்றிய கண்ணன், தன்னை தக்கோர் எடுத்துச் சென்று பூஜிக்கச் சொன்னார். அதற்குள் எதிரிகள் அவனைக் கொன்றுவிட மறுநாள் துவாரகை கண்ணனின் உடலெங்கும் ரத்தக் காயங்கள். அப்போது கண்ணன் இனி ஒரு நாளில் ஐந்து நாழிகை மட்டுமே துவாரகையிலும் மற்ற நேரமெல்லாம் டங்கபுரத்திலுமே இருப்பேன் என்றார். ஆகவே துவாரகையைவிட டங்கபுரம் உயர்ந்தது என்று சொல்வார்கள். பாலக்காட்டுக்குப் பக்கத்தில் பட்டாம்பி நகரின் மத்தியில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோயில். சின்ன குருவாயூர் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 22 ம் தேதியை குசேலர் தினமாகக் கொண்டு குசேலர் பூஜை நடத்தப்படுகிறது. அன்றைய தினத்தில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துணி முடிச்சுகளில் கிருஷ்ணனுக்குப் பிடித்தமான அவல் எடுத்துக் கொண்டு வருவார்கள். பக்தரின் பெயரில் அந்த அவல், கிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இப்பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து சாப்பிட்டால், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.