குன்னூர் தந்தி மாரியம்மன் திருவிழா சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2024 02:05
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இதில், இன்று தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் சித்திரை தேர் ஊர்வலம் நடந்தது. சிறப்பு விருந்தினராக அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் ஜான் பாண்டியன் பங்கேற்றார். குன்னூர் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து, மேள தாளங்கள் முழங்க, பறவை காவடி, தீர்த்த குட ஊர்வலத்துடன் துவங்கிய திருத்தேர் ஊர்வலம் மவுன்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது.
அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். இதில் பறவை காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தியும் அழகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். கருப்பராயர், வெங்கடாசலபதி, அம்மன் கடவுள் வேடமிட்டு பலரும் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். மதுரை வீரன் வேடமடைந்தவர் குதிரையின் மீது அமர்ந்து ஊர்வலத்தில் வந்தார். விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆடல் பாடல்களுடன் ஏராளமானோர் பங்கேற்றனர்.