பதிவு செய்த நாள்
05
மே
2024
02:05
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 2-ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 3-ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சியும், தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.
4-ம் தேதி காலை அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜைகள் நடந்ததுடன், ஆற்றங்கரைக்கு சென்று பறவை காவடி, பால் காவடி, வேல் பூட்டியும், பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூகுண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
அன்னதான நிகழ்ச்சியும், மாலை தேர் ஊர்வலமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியம் இடம்பெற்றதுடன் வானவேடிக்கை நடத்தப்பட்டது. இன்று காலை முத்து மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு ஆற்றங்கரைக்கு சென்று நீர் வெட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜையும் தொடர்ந்து அம்மன் திருக்கரகங்கள் பக்தர்களின் வீடுகளுக்கு சென்று அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. பூஜைகளை அர்ச்சகர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், மோகன் மற்றும் சண்முகம் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
சிறப்பாக நடைபெற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் பிரபாகரன், செயலாளர் சிவமயம், பொருளாளர் துரைரத்தினம், ஆலோசகர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், சந்தானம், யசோதரவாசன், முருகையா உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் மற்றும் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.