பதிவு செய்த நாள்
28
மார்
2015
12:03
சேலம்: சேலம், திருமலைகிரி கோவில் கும்பாபிஷேகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பட்டாதாரர்கள், "கோவில் நிலம், எங்களுக்கு சொந்தமானது என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நீதிமன்றத்தில், இது தொடர்பாக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். சேலம், திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர் உடனுறை சைலாம்பிகை தாயார் கோவில், வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த, 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில், இரு சமூகத்தினருக்கு இடையே, வழிபாடு தொடர்பான பிரச்னை எழுந்தது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், 144 தடை உத்தரவு போடப்பட்டது. 9ம் தேதி வரையில் இருந்த தடை, அதன்பின், 23ம் தேதி வரை நீட்டித்து, தற்போது, ஏப்ரல், 7ம் தேதி வரை, அமலில் உள்ளது. இரு தரப்பும், நீதிமன்றத்தை நாடியுள்ளன. இந்நிலையில், கோவிலை சுற்றியுள்ள குடியிருப்போர், நில உரிமையாளர்கள் செல்வம், சுப்பிரமணி, அய்யண்ணன், சின்னமுத்து, காளியப்பன், வெங்கடாசலம், காளிக்கவுண்டர், கந்தசாமி ஆகியோர், தங்களுடைய நிலத்தை சுற்றி கோவில் உள்ளது. எனவே, கோவில் இடம் எங்களுக்கு சொந்தமானது. அது புறம்போக்கு நிலமோ, அரசு நிலமோ கிடையாது. கோவில் இடத்தை எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் எனக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இந்த பிரச்னையால், கோவிலை கட்டிய, ஒரு தரப்பினரிடையே பிரிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மனு அளித்த அய்யண்ணன் கூறியதாவது: பல ஆண்டுக்கு முன் இருந்தே, கோவிலை சுற்றி எங்களுடைய நிலம் உள்ளது. கோவிலும், எங்களுடைய இடத்தில் தான் இருக்கிறது. ஆனால், தற்போது, அதை ஈஸ்வரன் கோவில் இடம் என்கின்றனர். கும்பாபிஷேக பிரச்னையால், நிலம் கையைவிட்டு போகும் நிலை உள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவோம், என்றார்.