கோவிந்தா கோஷம் முழங்க பச்சை பட்டுடுத்தி திருப்புவனம் வைகை ஆற்றில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2026 12:04
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
திருப்புவனத்தில் பழமை வாய்ந்த பாலகிருஷ்ணபெருமாள் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மதுரை கள்ளழகரை சுமந்து வரும் " சீர்பாதம் தாங்கிகள் " என்ற குறிப்பிட்ட சமுதயாதத்தினர் திருப்புவனத்தில் வசிக்கின்றனர். திருப்புவனத்தில் சித்திரை திருவிழா கொண்டாடி விட்டு தான் கள்ளழகரை சுமக்க செல்வார்கள். இந்தாண்டு திருவிழா 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 25ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர் தங்க நிற குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கிளம்பினார். நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த அழகருக்கு புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் வாசலில் வெண் கொடை வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 9:05 மணிக்கு பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா" கோஷத்தின் இடையே அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அவரை குளிர்வித்தனர். பக்தர்கள் பலரும் அழகருக்கு சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். பின் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் எழுந்தருளும் அழகர் நள்ளிரவில் வீரபத்ர கோயிலில் புஷ்பபல்லக்கில் எழுந்தருளுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவர் இளைஞர் பேரவை, யாதவர் பண்பாட்டு கழகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.