ராமன் சீதையை இலங்கையிலிருந்து மீட்டபின் அவளது கற்புத்தன்மையை நிலைநாட்ட அக்னிபிரவேசம் செய்ய வைத்தார். அக்னிதேவனை வரவழைத்து சீதையின் பரிசுத்தத் தன்மையை நிலைநாட்டியதால், அக்னிக்கு பாவம் நேர்ந்தது. தனக்கு உண்டான தோஷம் நீங்குவதற்காக, அவன் ராமேஸ்வரம் கடலில் நீராடி சீதாப்பிராட்டியாரை வழிபட்டான். அந்த இடமே அக்னிதீர்த்தம் எனப்பெயர் பெற்றது. ராமேஸ்வரம் கடலில் உள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால், நாம் செய்த பாவவினைகள் நீங்கும். ராமேஸ்வரத்தில் நீராட விரும்புபவர்கள் முதலில் அக்னிதீர்த்தத்தில் நீராடிய பின்னரே, கோயில் வளாகத்தில் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.