எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; திருக்கைலாயம் எனச் சொல்லப்படும். அக்கயிலையானது ஐந்து ஆவரண அமைப்புடையது என்பது புராண வழக்கு. இந்த ஆவரணங்களை திருச்சுற்று எனத் தமிழில் வழங்குவர். ஆன்மார்த்த பூசையில்; ஒன்றுக்குள் ஒன்று என்ற ஐந்து கட்ட அமைப்பு உடையதாகக் கருதி; வழிபாடு செய்யப்படும். திருக்கோயில் அமைப்பில்; இருபெருஞ்சுவர்களுக்கு இடையிலுள்ள பகுதியை ஒரு ஆவரணமாகக் கருதி; ஆறு பெருஞ் சுவர்களுக்கு இடையில் (கோட்டை அமைப்பு) ஐந்து ஆவரணங்களை நிறுவி; அப்பகுதியில் மண்டபங்களைக் கட்டி இறைத்திருமேனிகளை எழுந்தருளப் பண்ணி வழிபாடு செய்வர். கும்பாபிஷேகம் முதலிய பெருங்கிரியைகளில் அலங்கரிக்கப்பட்ட கும்பங்களை அவ்வவ் பகுதிகளில் வைத்துப் பூசிப்பர். ஐந்து ஆவரணங்களையும் பஞ்சா வரணங்கள் என்றும் பஞ்சப் பிரகாரங்கள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.
ஆகம வழக்கில் முதல் ஆவரணத்தை அந்தர் மண்டலம் என்றும்; இரண்டாம் ஆவரணத்தை அந்தர் ஹாரை என்றும்; மூன்றாம் ஆவரணத்தை மத்ய ஹாரை என்றும்; நான்காம் ஆவரணத்தை பாஷ்ய ஹாரை என்றும்; ஐந்தாம் ஆவரணத்தை மர்யாதா என்றும் சொல்வர். முதல் ஆவரணத்தில் பஞ்சப் பிரம மற்றும் அங்கதேவர்கள் பூசிக்கப்படுவர், இரண்டாம் ஆவரணத்தில் அனந்தேஸ்வரர் உள்ளிட்ட அட்ட வித்யேஸ்வரர்கள் பூசைக்கு உள்ளாவர். மூன்றாம் ஆவரணத்தில் கணபதி- அம்பிகை-சண்டர் உள்ளிட்ட இறைவர்களைப் பூசிப்பர். நான்காம் ஆவரணத்தில் அட்டதிக்குப் பாலகர்கள் வழிபடப்படுவர்; ஐந்தாம் ஆவரணத்தில் அவர்களுக்குரிய ஆயுதங்கள் வழிபடப்படும். தமிழகத்தில் திருக்கோயில் எதிலும் ஆவரண தேவர்கள் அனைவரும் இறைத் திருமேனிகளாக எழுந்தருளிவிக்கப்படவில்லை. பூசை வழக்கில் மட்டுமே உளர்.
அதுவும், திருக்கோயில்களில் மூல மூர்த்தியின் பீடத்தில் இவர்கள் அர்ச்சிக்கப்படுவர். ஆன்மார்த்த பூசையில் அவ்வவ் விடங்களில் ஒருமலரிட்டு வழிபடப்படும். கும்பாபிஷேகம் முதலிய பெருங்கிரியைகளில் கலசங்கள் வைத்து வழிபடுவர். ஆன்மார்த்த மற்றும் பரார்த்த பூசைகளில்; அனந்தர் மற்றும் அட்டதிக்குப் பாலகர்கள்; மூலமூர்த்தியை நோக்கியபடி இருகரம் கூப்பித் தொழுத வண்ணம் இருப்பர். கும்பாபிஷேகம் முதலிய கிரியைகளின் போது; நம்மை நோக்கியபடி அபய=வரத-கரங்கள் உடையவராய் நம்மை அருள்பாலித்து இருப்பார்.
அட்டதிக்குப் பாலகர்கள் யார்?
சைவ சித்தாந்த நோக்கில் அட்டதிக்குப் பாலகர்களும் முன்-முன் பிறவிகளில் மனிதர்களாய் இருந்தவர்களே. ஒரு பிறவியில் செய்யும் நல்வினை-தீவினைகளின் அடிப்படையிலேயே வேறு பிறவி கிடைக்கிறது. நல்வினை அதிகமாயிருக்கும் பட்சத்தில் உயர்ந்த பிறவியும்; தீவினை அதிகமாயிருக்கும் பட்சத்தின் தாழ்ந்த பிறவியும் வாய்க்கும். புண்ணிய கருமங்களைச் செய்து நல்வினைப் பயன் பெற்ற மனிதப் பிறவிகளே - தெய்வ நிலை பெற்று இந்திரன் முதலானோர் ஆயினர். சைவ சித்தாந்த பரிபாசையில்-ஆன்மாக்களை (உயிர்); சகலர் - ப்ரளயாகலர் விக்ஞான கலர் என மூவகைப்படுத்துவர். இந்திரன் முதலிய திக்பாலகர்கள் விக்ஞான கலர் ஆவர். பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்-மகேசன்-சதாசிவம்-விந்து-நாதம்-சக்தி-சிவம் என்ற நவபேதத்தில்; விந்து-நாதம்-சக்தி-சிவம் என்ற நான்கும் அருவ நிலையினர்; பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்-மகேசன் என்ற நால்வரும் உருவ நிலையினர்; சதாசிவம் - அருஉருவநிலையினர். இதுவே சிவலிங்க வடிவமாகும். சதாசிவத்தினின்றும் மகேஸ்வரன் தோன்றினார். இருபத்தைந்து மற்றும் அறுபத்து நான்கு வகைப்படும் இறைத்திரு மேனிகள் அனைவரும் மகேசுவர வடிவினர்களே யாவர்.
மகேஸ்வரனுடைய ஆற்றலில்; அயிரத்தொரு கூறாக ருத்ரன் தோற்றுவிக்கப்பட்டார். இதை, ஈஸ்வரஸ்ய ஸஹஸ்ராம்சாத் ருத்ரஸ்ய உத்பவ முச்யதே என்று சுப்ரபேதாகமம் கூறும். மகேஸ்வரனின் கோடியில் ஒரு அம்சமாக விஷ்ணு தோன்றினார். இதை, ஈஸ்வரஸ்யது கோட்யம்சாத் விஷ்ணு ஸ்தத்ரைவ் கீர்த்தித என்று ஆகமம் விளக்கும். விஷ்ணுவின் தொப்புள் கொடியினின்றும் பிரம்மா தோன்றினார். பிரம்மா, ஈஸ்வரனிடம்-சாமீப-சாரூப -நிலயில் இருந்த விஞ்ஞானகல ஆன்மாக்களை அட்டதிக்குப் பாலகர்களாக சிருஷ்டித்தார்.
திசைக் காவலர் ஆயினர்!
பிரம்மா வால் சிருஷ்டிக்கப்பட்ட அட்டதிக்குப் பாலகர்களான இந்திரனை கிழக்குத் திசைக்கும் (இதனை ஆகம வழக்கில் திக்கு என்பர்); அக்கினியை -தென்கிழக்குத் திசைக்கும் (இதனை ஆகம வழக்கில் விதிக் என்பர்); இயமனை-தெற்கிற்கும்; நிருதியை -தென் மேற்கிற்கும்; வருணனை மேற்கிற்றும்; வாயு-வை வட மேற்கிற்கும் குபேர-ண வடக்கிற்கும்; தனது அம்சமான ஈசான -ண வடகிழக்கிற்கும்; காவல் தெய்வங்களாக ஈஸ்வரன் நியமித்தார். அத்தோடு பிரம்மா-வை கிழக்கு மற்றும் வடகிழக்கிற்கு இடைப்பட்ட திசையில் இருந்தும்; விஷ்ணுவை தென்மேற்கு மற்றும் மேற்கிற்கு இடைப்பட்ட திசையில் இருந்தும்; சர்வ லோகங்களையும் காத்தருளுமாறு பணித்தார்! மேலும், பிரம்மாவையும்-விஷ்ணுவையும்; சிருஷ்டி-ஸ்திதி ஆகிய தொழில்களைச் செய்யுமாறும் அருளினார்.
நாம் பூசா வழக்கில்; சமசதுரக் கட்டத்துள்ளும்; சமதளத்திலும் வைத்து வழிபட்டாலும்; அவர்கள் இருந்தருளும் பகுதியானது மேல்-கீழாக அமைந்தது.
சிவனுக்குரிய கயிலங்கிரியினின்றும்; எண்பத்து நான்காயிரம் யோசனைக்குக் கீழே மனோவதீ எனும் பிரம்மனுடைய பட்டிணம் அமைந்துள்ளது. அங்கிருந்தே அவன் சிருஷ்டத் தொழிலைச் செய்கிறான்.
கயிலையின் கீழ்புறம் ஆயிரம் யோஜனை தூரத்திற்குக் கீழே இந்திரனது அமராவதி எனும் நகரம் அமைந்துள்ளது. அங்கிருந்தே அவன் காத்தல் தொழிலைப் புரிகிறான்.
இதன் அடிப்படையிலேயே தமிழகத்துக் திருக்கோயில்களின் ஈஸ்வரனின் கருவறை யினின்றும், ஒவ்வொரு ஆவரணமும் (கட்டிடப் பகுதியும்) ஒன்றுக்கொன்று தாழ்வான பகுதியாக அமைக்கப்பட்டிருத்தலைக் கண்டு இன்புறலாம்!
வழிபாட்டு வழக்கில் பிரம்மனையும் விஷ்ணுவையும் கிழக்கு மற்றும் மேற்கில் வைத்து வழிபட்டாலும், பிரம்மா-ஊர்த்து லோகத்திற்கும்; விஷ்ணு-அதல (பாதாள) லோகத்திற்கும் அதிபதிகளாவர். அவ்வாறு வைத்து வழிபடல் சாத்தியமின்மை கருதி இவ்வாறு வழிபடல் ஆயினர்.
இவர்களுடைய ஆயுதங்களான வஜ்ரம்-சக்கரம் முதலிய பத்து ஆயுதங்களும் ஐந்தாவது ஆவரணத்தில் வைத்துப் பூசிக்கப்படும்.
என்றாலும் திருக்கோயில் வழக்கில் ஐந்தாவது ஆவரணத்தில் இவர்களுக்கு என்று தனிப்பகுதி ஒதுக்கப்பட்டு வழிபடும் வழக்கு நடைமுறையிலில்லை. அபூர்வமாக அகோராஸ்த தேவர் மட்டும், திருவெண்காட்டுத் திருக்கோயில் ஐந்தாம் ஆவரணத்தில் உள்ளார். வழிபடப் படுகின்றார்.
ஆயுத தேவர்களுக்கும் திருமேனி உண்டு. தியான சுலோகங்களும் உள்ளது. தேவியர்களும் கூறப்பட்டுள்ளார். இருகரங்களையும் குவித்து ப்ரயோக நிலையில் அதில் ஆயுதம் ஏந்திய நிலையில் இருப்பர். தலைமீது தாங்கி இருப்பதாகவும் ஒரு சிலர் கருஙுவர். ஆனாலும், இவர்களுக்குத் தானே இயங்கும் ஆற்றல் இல்லை பிற தேவர்கள் பிரயோகித்தாலே செய்படுவர். எனவே, இவர்களுக்குத் தனித்துவ வழிபாடும் இல்லை.
ஆன்மார்த்த மற்றும் பரார்த்த பூசையில் ஒரு மலரிட்டு வழிபடப்படுவர். கும்பாபிஷேக நிகழ்வில் திக்பால தேவர்களுடன் சேர்த்தே ஆயுத தேவர்களும் வழிபடப்படுவர். அது முறையே இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை உணர்த்த விரும்புகின்றோம்.