பதிவு செய்த நாள்
17
ஜூன்
2015
12:06
சத்தியமங்கலம் : அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள்
கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுப்புடவைகளை பக்தர்கள்,
போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி
மாரியம்மன் கோவில் பிரதானமானது. நேற்று அமாவாசை என்பதால், காலை, 6 மணி பூஜைக்கே, பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர்.மதியம் உச்சிகால பூஜையின்போது, கோவிலை சுற்றிலும், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு, ஈரோடு, கோபி, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, பக்தர்கள் திரளாக நடந்து சென்று, பண்ணாரி அம்மனை வழிபட்டனர். நேற்று பக்தர்களுக்கு, பண்ணாரிமாரியம்மன், தங்க கவசத்தில் அருள்பாலித்தார்.அம்மனுக்கு பணத்தால் கட்டப்பட்ட மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கோவிலுக்கு முன் உள்ள குண்டத்தில், பக்தர்கள் உப்பை குவித்து, வணங்கினர். கோவில்
வளாகத்தில் பல்வேறு பகுதிகளில், அன்னதானம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை
நிறைவு செய்தனர்.இதேபோல், அமாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் உள்ள
பவானீஸ்வரர் கோவில் மற்றும் வேணுகோபால் ஸ்வாமி கோவிலிலும், வியார்பாளையத்தில்
உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும், தவளகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுப்புடவைகள், நேற்று கோவில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த புடவைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.