திருப்புத்தூரில் மதநல்லிணக்கசந்தனக் கூடு - ஆடி வெள்ளி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2015 02:08
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் ஆடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கான்பாசாயுபு பள்ளிவாசல் சந்தனக் கூடும், ராஜகாளியம்மன் கோயில் ஆடி வெள்ளியையும் இந்துக்களும், முஸ்லிம்களும் கொண்டாடுகின்றனர்.
திருப்புத்தூர் பூ வியாபாரத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளனர். ஆடி மாதத்தில் இந்த விழாக்களை ஒருங்கிணைத்து இந்துக்கள், இஸ்லாமியர்கள் பங்கேற்கும் புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கொண்டாடி வருகின்றனர்.நேற்று முன்தினம் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு சங்கத்தினர் சந்தனக்குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியே கான்பா பள்ளிவாசல் சென்றனர். பின்னர் அங்கு கொடியேற்றம் நடந்து, சிறப்பாக சந்தன உரூஸ் வைபவம் கொண்டாடப்பட்டது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, ராஜ காளியம்மன் கோயிலுக்கு சங்கத்தினர் பால்குடம், பூத்தட்டு, அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிசேகம் நடந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மத நல்லிணக்கத்துடன் கடந்த 75 ஆண்டுகளாக இவ்விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.