பதிவு செய்த நாள்
01
செப்
2015
11:09
சென்னை: கோவில்களின் பாரம்பரியம் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகள் மீது, அரசு எடுக்க உள்ள நடவடிக்கையை தெரிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றில், பழமையான கோவில்களின் புராதனத்தை பாதுகாக்க, 17 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, தமிழக அரசு அமைக்கவில்லை என, செய்தி வெளியானது.
புராதன பாதுகாப்பு சங்கம்: இந்த செய்தியின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. சென்னை, திருவொற்றியூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலின் புராதன கட்டடத்தை பாதுகாக்க கோரி, புராதன பாதுகாப்பு சங்கமும் மனு தாக்கல் செய்தது.மேலும், மத விழாக்கள், கோவில் செயல்பாடுகளில், அரசு தலையிடக் கூடாது; மகா கும்பாபிஷேகம் என்ற பெயரில், கோவிலின் புராதன மதிப்பை அழித்து விடக்கூடாது என, கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கோவில்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையில் குழுவை நியமித்தது.இந்தக் குழு, மகாபலிபுரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் (வடிவுடை அம்மன்) ஆகியவற்றை பார்வையிட்டு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.
அனைத்து கோவில்களையும் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய, போதுமான நேரம் இல்லாததால், முக்கியமான மூன்று இடங்கள் மட்டும், மாதிரியாக எடுக்கப்பட்டதாக குழு தெரிவித்துள்ளது. குழு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்த கோவில்களில், தினசரி பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. கோவில்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு, பழுது பார்க்கும் பணிகள் ஆகம விதிகளின்படி நடக்கவில்லை.எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட பழமைவாய்ந்த கற்கள் அகற்றப்பட்டு, டைல்ஸ் கற்களாக மாற்றப்பட்டுள்ளன. எனாமல் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோபுரம் அருகில் தண்ணீர் தொட்டி, கோவில் வளாகத்தில், நிர்வாக அதிகாரிக்கான அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள், விதிகளின்படி நடக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவில் புனரமைப்பு பணி: இந்த அறிக்கையை பரிசீலித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:கோவில் புனரமைப்பு பணிகளில், நிபுணர்கள் இருந்தாலும், அவர்களிடம் ஆலோசிக்கவில்லை என, குழு தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களையும் கண்காணிக்க, உயர்மட்டக் குழுவை அமைக்கவும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, குழு அளித்த பரிந்துரைகள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை, எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை அமல்படுத்துவதில், தடங்கல் உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.விசாரணை, அக்., 14ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தெளிவு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர், விசாரணையின் போது, உடன் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.