பதிவு செய்த நாள்
03
செப்
2015
11:09
பெசன்ட்நகர்: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில், கோவில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்களை, பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில், திருவிழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான, நேற்று, ஆசிரியர்கள் விழாவாக சிறப்பிக்கப்பட்டது. கோல்டன் ஜார்ஜ் நகர் சபையை சேர்ந்த பங்கு தந்தை, அருட்பணி வின்சென்ட் சின்னத்துரை, செங்குன்றம் பங்கு தந்தை, அருட்பணி அருளப்பா ஆகியோர் தலைமையில், அர்ப்பணமாய் வாழ்ந்திடும் ஆசிரியம் என்ற தலைப்பில் கூட்டு திருப்பலி நடந்தது.அதை தொடர்ந்து, கடற்கரை சாலையில் மாதா தேர் பவனி நடைபெற்றது. மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகள், நேற்றைய திரு விழாவை முன்னின்று நடத்தின. கோவில் வளாகத்தில் உள்ள, அருங்காட்சியகத்தில் திருமணம், படிப்பு, வேலை, உடல் நலம் என, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வழங்கிய, தாலி, கால், கண் போன்ற வெள்ளி, தங்கத்தால் ஆன உறுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி, நமது நாளிதழ் வெளியிட்ட, ஒரு பக்க மாதா படம் சட்டமிடப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. நேர்த்திக் கடன் பொருட்களை, பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.