விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டை நைவேத்தியம் அவரது தம்பியான ஐயப்பனுக்கும் படைக்கப்படுகிறது. இந்த அதிசயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு கருங்குளம் பூ ஐயப்பன் கோயிலில் நடக்கிறது. பங்குனி உத்திர திருநாளில் சுவாமிக்கு இந்த கொழுக்கட்டையை ஆண்களே சமைத்து படைக்கிறார்கள். 63 கிலோ பச்சரிசியில் ஒரே கொழுக்கட்டையாக இதை தயாரிக்கிறார்கள், கொழுக்கட்டை தயாரிக்கும்போது வாயில் துணியை கட்டிக்கொண்டு அரிசியை உரலில் இட்டு இடிக்கிறார்கள். பின்பு அதை கொழுக்கட்டையாக பிடித்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வருகிறார்கள். சாமியாடும் ஒருவர் அந்த கொழுக்கட்டையை அவிப்பதற்குரிய ஏற்பாட்டை செய்வார். சாமியாடியபடியே அந்த கொழுக்கட்டையை அவித்து முடிப்பார். பின்பு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படுகிறது.