பதிவு செய்த நாள்
03
அக்
2015
12:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நவராத்திரி விழாவிற்காக, பலவகை கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
நவராத்திரி விழா, வரும் 12ம் தேதி துவங்கி, 23ம் தேதி விஜயதசமியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவிற்கு, கொலு பொம்மைகள் வாங்கி வீடுகளில் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
சின்ன காஞ்சிபுரத்தில், அம்மன், அஷ்டலட்சுமி, சரஸ்வதி, பெருமாள், சிவன் பார்வதி பொம்மைகளும்; கோவில் திருவிழா, கருடசேவை, கல்யான ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களை விளக்கும் பொம்மைகளும் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, மைசூர் மேல்கோட்டை செல்லப்பிள்ளை பெருமாள், நிலாத்துண்ட பெருமாள், அனந்த பத்மநாப பெருமாள், உலகளந்த பெருமாள் போன்ற பெருமாள் பொம்மைகள், இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ராஜேஷ் என்பவர் கூறுகையில், சீசனுக்கு தகுந்தமாதிரி, பொம்மைகளை தயாரித்து விற்று வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை பொம்மைகளை அறிமுகம் செய்து விற்கிறோம் என்றார்.