திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனை கண்டு வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த, 25ம் தேதி மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்களுக்கு தீபம் எரியும். தீப திருவிழா முடிந்து தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பம் உற்சவம் நடந்தது. நேற்று பராசக்தி அம்மன் தெப்பம் உற்சவம் நடந்தது. இன்று சுப்பிரமணியர் தெப்ப உற்சவம் நடக்கிறது. தீப திருவிழா முடிந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப்பாதை முழுவதும் மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.