பதிவு செய்த நாள்
01
டிச
2015
05:12
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், உலக பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தை சுற்றிலும் 16 மண்டபங்களில் அமைந்துள்ள சோடசமகாலிங்க சுவாமிகளுக்கு மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்காண பக்தர்கள் நான்கு கரைகளிலும் திரண்டு நின்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
12 ஆண்டுகளுக்கு ஓர் முறை நடைபெறும் மகாமக பெருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது. இதனை யொட்டி கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய சைவ மற்றும் வைணவத்தலங்களில் கும்பாபிஷேகங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இப்புனித குளத்தின் உள்ளே கங்கா, பிர்மா, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, உள்ளிட்ட 20 வகையான தீர்த்த கிணறுகள் உள்ளன மேலும் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன அதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்ததேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், உள்ளிட்ட மொத்தம் 16 சிவலிங்க திருமேனிகள் அமைந்துள்ளன இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என குறிப்பிடுவது வழக்கம்.
இத்தகைய சோடஷமகாலிங்க சுவாமிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 19 லட்சத்தி 38 ஆயிரம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்காண யாகசாலை பூஜைகள் கடந்த 27ம் தேதி சர்வசாதகம் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கி இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று வரிசையாக தென்மேற்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் இருந்து திருவலமாக சென்று 16 மண்டபத்திற்கும் அடுத்தடுத்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்காண மக்கள் நான்கரைகளிலும் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். இதைபோல, கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயிலில் பிரகன்நாயகி உடனாய நாகேசுவவரர் மூலவராக எழுந்தருளியுள்ளார். மகாமக பெருவிழாவை முன்னிட்டு இக்கோயில் 1கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.