பதிவு செய்த நாள்
29
டிச
2015
02:12
கவர்ச்சியாக பேசி காரியம் சாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
குருபகவான் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. அவர் 11ம் இடமான கன்னி ராசியில் இருப்பது சிறப்பான இடம். பலவிதத்திலும் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப்பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். குருவால் இப்படி நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் சில பின்னடைவுகளையும் நீங்கள் சந்திக்கலாம். அத்துடன் குரு பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் தரும் பலன்கள் சற்று குறையலாம். ஏழரை சனியால் உடல் உபாதைகள் வரலாம், உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்படலாம். வெளியூர் வாசம் இருக்கும். அதே நேரம், அவரது 3-ம் இடத்துப் பார்வை பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தரும். அவர் மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரத்தில் சிக்குகிறார்.
இந்த காலத்தில் அவர் கெடுபலன்களைக் குறைத்து நன்மை தர ஆயத்தமாவார். ராகு, கேதுவும் உகந்த இடங்களில் இல்லாததால் அவர்களாலும் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேற்கண்ட கிரக நிலை அடிப்படையில் விரிவான பலனை காணலாம். ஜனவரியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குருவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். எடுத்த காரியம் சிறப்பாக முடியும். உங்கள் செல்லாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். பிப்ரவரி முதல் ஜூலை வரை மன சஞ்சலம் ஏற்படலாம். வீண்விவாதங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கவும். எதையும் தீவிர முயற்சியின் பேரில்தான் செய்து முடிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் பொருளாதார வளத்திற்கு குறைவில்லை என்பதால், ஆடம்பர பொருட்கள், புதிய வீடு, மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கும். சனியும், ராகுவும் தொடர்ந்து சாதகமற்ற இடத்தில் இருப்பதால் தம்பதியினர் இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
தொழில், வியாபாரம்: குருவால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். குறிப்பாக இரும்பு, கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திரம் தொடர்பான தொழில் நல்ல வளர்ச்சி அடையும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை சனி வக்கிரத்தில் சிக்குவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். புதிய தொழிலையும் ஜூலை மாதத்துக்குள் தொடங்கி விடவும். கையில் இருக்கும் பணத்தை நிரந்தர டெபாசிட் செய்வது புத்தி சாலித்தனம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது.
பணியாளர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை வேலையில் அலைச்சலும், பளுவும் இருக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். வேலையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அதன் பிறகு வேலையில் ஆர்வம் பிறக்கும். பளு குறையும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். அவர்களால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை பார்த்துக் கொண்டே பக்க தொழில் செய்பவர்கள் கூடுதல் வருமானம் காணலாம். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையை இழந்தவர்களுக்கும், வேலையின்றி இருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை வரை தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். அதன்பின் ஒப்பந்தங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பாராட்டுகள், விருதுகள் போன்றவை வந்து சேரும்.
அரசியல்வாதிகள்: நல்ல வளத்தோடு இருப்பர். சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம்.
மாணவர்கள்: பிப்ரவரி முதல் ஜூலை சற்று சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். பிறகு நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை உங்களை உயர்த்தும். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள்: நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறையில் விவசாயம் செய்து கூடுதல் வருவாயை காணலாம். வழக்கு விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக அமையும்.
பெண்கள்: குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். புதிய நகை, ஆடைகள் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். அதே நேரம் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சற்று விட்டுக் கொடுத்து போகவும்.
பரிகாரம்: சனி, ராகு-கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அந்த கிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரமும், கேதுவுக்கு பலவண்ண நிற வஸ்திரமும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். பவுர்ணமி விரதம் இருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்.