பதிவு செய்த நாள்
29
டிச
2015
02:12
திட்டமிட்டு செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையும். கடந்த ஆண்டு இருந்த பிரச்னை அனைத்தும் விலகும். கேது ஜன.8ல் 3-ம் இடமான கும்பத்திற்கு வந்து நன்மைகளை தரப் போகிறார். பொருளாதாரத்தை வாரி வழங்குவார். உடல் உபாதை மறைந்து பூரண குணமாக்குவார். ராகு ஜன.8ல் 9-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல என்றாலும் திறமையில் இருந்த பின் தங்கிய நிலை இருக்காது. குருபகவான் இப்போது 10-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமற்ற நிலை என்றாலும், அவரது 5-ம் பார்வை மகரத்தில் இருப்பது சிறப்பானது. குரு பகவான் பிப். 7 முதல் ஆக. 1 வரை வக்கிரம் அடைந்து சிம்ம ராசியில் இருக்கிறார். இந்த காலத்தில் நன்மை மேலோங்கும். தற்போது சனிபகவான் 12 ல் இருக்கிறார். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஏழரை சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். மார்ச் 28 முதல் ஜூலை 14 வரை வக்கிரமாக இருப்பதால் கெடுபலன் தர மாட்டார். சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலன்களை இனி காணலாம். இது ஏழரை சனிகாலம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுத்தவும். பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும். ஆனால் பிப். 7 முதல் உங்களுக்கு சாதகமான காற்று வீசத் தொடங்கும். குருவும், கேதுவும் நல்ல பொருளாதார வளத்தை தருவார்கள். நீண்ட கால ஆசை பூர்த்தியாகும். வீடு, நிலம் போன்றவை வாங்கலாம். குடும்பத்தில் இருந்த பின்தங்கிய நிலை படிப்படியாக மறையும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூலை மாதத்திற்குள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்கலாம்.
தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை இனி இருக்காது. மார்ச் மாதத்திற்குப் பிறகு தொழிலில் வளர்ச்சியை காணலாம். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். ஜூலை 14க்கு பிறகு புதிய வியாபாரம் வேண்டாம். எதிலும் அதிகமுதலீடு செய்ய வேண்டாம். இருப்பதைக் கொண்டு நிறைவாக இருப்பது நல்லது.
பணியாளர்கள்: பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பணிச்சுமையைச் சந்தித்தாலும், அதற்குரிய லாபம் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆர்வம் மிகும். இதனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். மேல்அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்க பெறுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்: திறமைக்கு ஏற்ற நற்பெயரும், புகழும் கிடைக்கும். பிப்ரவரி முதல் ஜூலை வரை தட்டிப்பறிக்கப்பட்ட பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். நடிப்பு திறனை வெளிப்படுத்தி முன்னேறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தலைமையின் கருத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது அவசியம். சிலருக்கு எதிர்பாராமல் புதிய பதவி கிடைக்கலாம்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். முயற்சிக்குரிய பலன் கிடைக்காமல் போகாது. பிப்ரவரி முதல் ஜூலை வரை முன்னேற்றமான காலமாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்க பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள்: பிப்ரவரி வரை அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். அதன்பின் நெல், கோதுமை, கேழ்வரகு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூலும், வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. ஆண்டின் இறுதியில் கைவிட்டு போன சொத்து கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் பிப்.7 வரை விட்டுக்கொடுத்துப் போகவும். அதன்பின் நிலைமை சீராகும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். தொழில் நடத்தும் பெண்கள் நல்ல வளத்தை காண்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ராகு கால பைரவர் வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வியாழக்கிழமை குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
செல்ல வேண்டிய கோவில்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்