பதிவு செய்த நாள்
07
ஜன
2016
10:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி முடங்கியுள்ளது. திருவொற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ராஜகோபுர திருப்பணி, 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதற்காக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் சுறுசுறுப்பாக நடந்த பணியில், படிப்படியாக தொய்வு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளாக, இந்த பணி முற்றிலுமாக முடங்கியது. ஆட்கள் மற்றும் நிதி பற்றாக்குறைதான், பணி முடங்க, காரணமாக கூறப்படுகிறது. எட்டு ஆண்டுகளாக பணி நடைபெற்றும், கோபுர பணி, பாதி கூட முடியவில்லை. இதனால், எட்டு ஆண்டுகளாக கருட சேவை, வைகுண்ட ஏகாதசி, திருவிழா காலங்களில் நடத்தப்படும் வாகன புறப்பாடு போன்ற நிகழ்வுகள் நடைபெறாததால் யானை, குதிரை, அன்னம், யாழி, கருடன் உள்ளிட்ட மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த பணியை விரைந்து முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.