பதிவு செய்த நாள்
11
ஜன
2016
12:01
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி வேள்வியும், சிறப்பு சங்கல்ப பூஜைகளும் நடந்தன. காலை, 8:30 மணிக்கு விநாயகர் வழிபாடும், சிறப்பு வேள்வியும் செய்யப்பட்டன. அடுத்து, 9:30 மணிக்கு பரிகார சங்கல்ப பூஜைகளும், பகல், 12:00 மணிக்கு ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஜோதி வேலவன் வேள்வியை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நந்தவனம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சபை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். அதே போன்று, மேட்டுப்பாளையம் காமராஜ் நகரில் உள்ள தேவி கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாராலிங்கேஸ்வரர் கோவிலில், ராகு-கேது பெயர்ச்சி வேள்வி பூஜை நடந்தது. இக்கோவிலில் காலை, 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடும், ராகுகேது பெயர்ச்சி சிறப்பு வேள்வியும் நடந்தது.பின், பரிகார சங்கல்ப பூஜைகளும், தொடர்ந்து ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.