பழநி மலையின் அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் திருவாவினன்குடி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடிய பின்னரே காவடி நேர்த்திக் கடனை செலுத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆவினன்குடி குழந்தை வேலாயுதர் கோவிலில் மயில் மீது அமர்ந்த நிலையில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். வேலாயுத மூர்த்தி என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலமே திருமுருகாற்றுப்படையில் மூன்றாவதுபடை வீடாக குறிக்கப்பட்டுள்ளது. இங்கு முருகனைத் தரிசிக்க முனிவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் அனைவரும் கூடி நின்றதாக நக்கீரர் குறிப்பிடுகிறார். நெல்லி வனம் என்னும் புராணப்பெயர் கொண்ட இக்கோவிலின் தலவிருட்சமாக நெல்லிமரம் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள வேலாயுதரை தரிசித்த பின்னரே மலைக்கோவில் மூலவரான தண்டாயுதபாணியை தரிசிக்க செல்ல வேண்டும். * காலை 9.00 மணிக்கு முத்துகுமாரசுவாமி தந்தப்பல்லக்கில் பவனி. இரவு 7.30 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பவனி.