பதிவு செய்த நாள்
30
ஜன
2016
11:01
சபரிமலை: பம்பை ஆற்றில், மாசு அதிகரித்து வருவது குறித்து பதில் அளிக்குமாறு, கேரள அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில், இரண்டாவது பெரிய ஆறாக, சபரிமலை, பம்பை ஆறு உள்ளது. ஆண்டுதோறும், ஐய்யப்ப தரிசனத்துகாக வரும், 50 லட்சம் பக்தர்கள் பம்பையில் நீராடுகின்றனர். இதனால், பம்பை ஆற்றை தினமும் பராமரிக்க, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜன., 15ம் தேதி நடந்த மகரவிளக்கு பூஜையின்போது, பம்பை நீரில், அனுமதிக்கப்பட்ட அளவை விட நுண்கிருமிகள் அளவு அதிகமாயின. பம்பை ஆறு மற்றும் நிஜுநாங்கர் ஓடை மாசடைந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது என, நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதனடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய, இரண்டாவது அமர்வு, தானே முன்வந்து இந்த வழக்கை, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சபரிமலை, பம்பை ஆறு மாசடைந்து வருவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, கேரள மாநில முதன்மை செயலர், சுற்றுச்சூழல் செயலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பத்தினம்திட்டா மா வட்ட கலெக்டர் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்ய, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை, பிப்., 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.