பதிவு செய்த நாள்
30
ஜன
2016
11:01
ரெட்டியார்சத்திரம்: கும்பகோணத்தில் இருந்து பழநிக்கு, 18 நாட்கள் பாதயாத்திரையாக வரும் பர்வதராஜகுல காவடிக்குழு, (ஜன.,29) ரெட்டியார்சத்திரத்தை கடந்து சென்றது. பழநி கோயில் தைப்பூச விழா முடிந்தபோதும், பாதயாத்திரை பக்தர்களின் வருகை தொடர்கிறது. பொதுவாக மலைக்கோயிலில் இரவு நேரத்தில் தங்க எவரையும் அனுதிப்பதில்லை. இருப்பினும் பர்வதராஜ குலத்தைச்சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு. திருப்பூர் மாவட்டம், எடப்பாடி மற்றும் கும்பகோணத்தில் இருந்து வரும் இக்குழுவினர் மலைக்கோயிலில் தங்கியிருந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக கும்பகோணம் அருகே துாக்காம்பாளையத்தில் இருந்து, இக்குழுவினர் 67 ஆண்டுகளாக பாதயாத்திரையாக வருகின்றனர். தொடர்ந்து 50 ஆண்டுகளாக இக்குழுவில் இடம்பெற்றுள்ள பக்தர் பொன்னிமெய்வேல் கூறுகையில், “ஆண்டுதோறும் தை முதல் நாளில் புறப்பட்டு, 18 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். 18ம் நாளில் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் முடிப்போம். பாதயாத்திரை பக்தர்களின், நடைபயண நாட்களுக்கான உணவு, தங்குமிட வசதிகள் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. பர்வதராஜ குலத்தினருக்கு மலைக்கோயில் தங்கலுக்கான அனுமதியை பெரும் வரமாக நினைக்கிறோம்,” என்றார்.