திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சலவைத் தொழிலாளர்கள், தென்பெண்ணையில் தொரைப் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தைமாத துவக்கத்தில் பொங்கல் வைத்து தொழிலை துவங்குவது, சலவைத் தொழிலாளர்களின் மரபு. தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும், நதியை வணங்கி வழிபடும் இந்நிகழ்ச்சி, திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்தது. தென்பெண்ணையில் பந்தலிட்டு அம்மனை ஆவாகனம் செய்தனர். பொங்கல் வைத்து மழை பெய்து நீர்வளம் பெருக ஆடு வெட்டி, படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். சலவைத் தொழிலாளர் சங்க தலைவர் முருகன், செயலாளர் குமார், பொருளாளர் அண்ணாதுரை மற்றும் சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இதில் கலந்து கொண்டனர். மாலையில், ஊர்வலமாக சென்று நகரின் முக்கிய கோவில்களில் வழிபாடு நடந்தது.