பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
தங்கவயல்: தங்கவயலின் பழமை வாய்ந்த பெத்தப்பள்ளி கெங்கையம்மன் கோவில் திருவிழா, இன்று நடக்கிறது.தங்க சுரங்கம் ஆரம்பிக்கும் முன்பாகவே இருந்த கிராமம் பெத்தப்பள்ளி. இதை ஆரம்பத்தில் பவுத்தப்பள்ளி கிராமம் என்று அழைக்கப்பட்டு, காலத்தால் மாறி, பெத்தப்பள்ளி கிராமம் ஆனது. இந்த கிராமத்தில், 150 ஆண்டுகளுக்கு மேலான, சக்தி வாய்ந்த கெங்கையம்மன் கோவில் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை தொடர்ந்து தான், ஆவணி சீத்தம்மா மலை திருவிழா, ஈஸ்வரன் கோவில் திருவிழா, வெங்கடேச பெருமாள் கோவில் திருவிழா என, தொடர்ச்சியாக விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
தங்க சுரங்கம் ஆரம்பித்த காலத்தில், ஆங்கிலேய அதிகாரிகள், பெத்தப்பள்ளி கிராமத்துக்கு
சென்றபோது, ஒருவர் காலணி அணிந்து, கோவிலுக்குள் செல்ல முயன்றார். கிராம மக்கள்
தடுத்து, காலணியுடன் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், அவர், காலணியுடன் கோவிலுக்குள் நுழைந்தார். சில நாட்களிலேயே அவருக்கு, அம்மை போட்டது. இதனால் அவர் பயந்து நடுங்கினார். இதையடுத்து, கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்காக, தங்க சுரங்க தொழிலாளர்களுக்கும், பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அறிவித்தார். தங்க சுரங்கம் மூடும் வரை இந்த விடுமுறை நீடித்தது.
கெங்கையம்மன் கோவிலின் கல்வெட்டு களும் தமிழிலேயே இருந்தது. பெரும்பாலும் தங்கவயல் நகரை சேர்ந்தவர்களே பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். இன்று மாலை நடக்கும் அம்மன் தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். காலையிலிருந்தே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.