பதிவு செய்த நாள்
17
மார்
2016
11:03
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின், பங்குனிப் பெருவிழாவின், மூன்றாம் நாளான நேற்று காலை, அதிகார நந்தி வாகனத்தில், கபாலீஸ்வரர் வீதியுலா நடந்தது.
இன்று காலை, புருஷாமிருக வாகனத்திலும், இரவு, நாக வாகனத்திலும், கபாலீஸ்வரர் வீதியுலா நடக்க உள்ளது. நாளை காலை, சவுடல் விமானத்திலும், இரவு, வெள்ளி ரிஷப வாகனத்திலும் கபாலீஸ்வரர் எழுந்தருள உள்ளார்.
பக்தர்கள் கடும் அதிருப்தி: நேற்று நடந்த அதிகார நந்தி வீதியுலாவில், கபாலீஸ்வரருக்கு சரியாக அலங்காரம் செய்யப்படவில்லை என, பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், கோவில் கோபுர வாசல் வழியாக, வெள்ளை சாத்துப்படியில் அதிகார நந்தி வாகனத்தில் இறைவன் காட்சி தரும் அழகே தனி தான். ஆனால் சமீபகாலமாக வெள்ளை சாத்துப்படியே இல்லாமல், சம்பங்கி மாலை சார்த்தப்படுகிறது. இந்த ஆண்டு, அலங்காரம் மிக மிக மோசமாகி விட்டது. பெரிய வடிவிலான மாலைகளை, முறையாக அணிவிக்காமல், தாறுமாறாக போட்டிருந்தனர். கபாலீஸ்வரர் காலுக்கு கீழ், மல்லிகை மாலைகளை தொங்க விடுவர். இந்த முறை, புடவையை சாற்றி விட்டனர். அடுத்த ஆண்டு முதலாவது இது போன்ற குறைகள் களையப்பட வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.