பூவராகசுவாமி கோவில் சித்திரை உற்சவத்திற்கு பந்தல்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2016 12:04
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை உற்சவத்திற்கு பந்தல்கால் நடும் விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக சித்திரை உற்சவம் நடைபெறவில்லை. தற்போது கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததால் சித்திரை உற்சவம் வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் நகர வர்த்தக நலச்சங்கம் சார்பில் தேர்த் திருவிழா 20ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து 22ம் தேதி மதியம் மட்டையடி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பந்தல் போடுதல் மற்றும் தேர் கட்டும் பணிகளுக்கு பந்தல் கால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக மூலவர் பெருமாள், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடந்தது. பின்னர் கோவில் முன்புறம் பந்தல் கால் நடும் விழாவும், தேர் மீது கட்டுமானப் பணிகளுக்கான கால்நடும் விழாவும் நடந்தது. நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் மதனா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட துணைத் தலைவர் ரவி, ஸ்ரீமுஷ்ணம் வர்த்தக நலச் சங்கத் தலைவர் சிவானந்தம், செயலர் பன்னீர்செல்வம், முத்துராமலிங்கம் உள்ளிட்ட வர்த்தக நல சங்க பிரமுகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.