கயிலை வாத்தியம் முழங்க.. பரமக்குடியில் சித்திரைத் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 04:04
பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் ஹர ஹர, சிவ சிவ கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. பரமக்குடியில் உள்ள ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் கடந்த பத்து நாட்களாக சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசாலாட்சி சமேத சந்திரசேகரர் திருக்கல்யாண உற்சவங்கள் நடந்தன. தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு இரண்டு திருக்கோயில்களிலும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்பாள் தேர் என தனித்தனியாக வலம் வந்தனர். கயிலை வாத்தியம் முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்திப் பரவசத்துடன் இழுத்து வந்தனர். பின்னர் தேர் மதியம் 2 மணியளவில் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.