சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கண்நோய் உட்பட சகல நோய் தீர்க்கும் அம்மனாக நாட்டரசன்கோட்டையில் வீற்றிருக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று (மே.13ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் வைகாசி விழா துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உற்சவராக எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேகம் செய்த பின் கொடியேற்றப்பட்டது.