பதிவு செய்த நாள்
18
ஜூன்
2016
02:06
பெற்றவர்கள் பெருமையடைவதும் சிறுமையடைவதும் அவர்களது குழந்தைகளால்தான். எனவே குழந்தைப் பருவத்திலிருந்தே தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை தாய்மார்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாம் குழந்தைகளை வளர்ப்பதுபற்றி பல நல்ல கருத்துக்களை கூறுகிறது. தாலாட்டு பாடும்போது நபிகள் நாயகத்தையும், மகான்களையும் போற்றும் படியான பாடல்களை பாடவேண்டும். அதன்பிறகு அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் உள்ளிட்ட சொற்றொடர்களை கிளிப்பிள்ளைக்கு கற்றுத்தருவது போல கற்பிக்க வேண்டும். சமய சார்புடைய சொற்களை கற்றுத்தருவதால் மார்க்கப்பற்று ஏற்படும்.
குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு குறிப்பிட்ட இடத்தில் மலஜலம் கழித்தல், இடக்கையால் கழுவுதல், பல் துலக்குதல், உடை அணிதல், சாப்பிடும் முன்பு பிஸ்மி சொல்லி வலக்கரத்தால் சிந்தாமல் சாப்பிட வைத்தல், சாப்பிட்டபின் இறைவனுக்கு ஷுக்ரு (நன்றி) செய்தல் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை கற்பிக்க வேண்டும். இரண்டு வயது பூர்த்தியானதும் நீதிநெறி வாக்கியங்கள், நன்மையை போதிக்கும் பாடல்கள், நபிமார்கள், இறை நேசர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகள், மனித நேயத்தை வளர்க்கும் கதைகள் ஆகியவற்றை சொல்லித்தர வேண்டும். நான்கு முதல் 12 வயது வரையான ஆரம்ப, நடுநிலை கல்வி கற்கும் காலத்தில் அரபி பாடத்தை கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு பிற மொழி பயிற்சியையும் தரவேண்டும். ஏழு வயதிலேயே தொழுகையை கற்றுத்தர வேண்டும். பெண் குழந்தைகளை கோஷா (பர்தா அணிதல்) முறைப்படி படிக்கவைக்க வேண்டும். அன்னிய ஆண்களை அனாவசியமாக வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது.
கற்பை உயிரினும் உயர்ந்ததாக கருதும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி, சிக்கனமான, எளிமையான, இணக்கமான முறையில் குடும்பம் நடத்தும் கலையையும் அவர்கள் உள்ளத்தில் படிய வைக்க வேண்டும். குழந்தைகளை தோழனைப் போல கருதி நடத்தவேண்டும். லுக்மான் ஹக்கீம் என்ற மருத்துவமேதை, “மகனே! நிச்சயமாக உள்ளம் விளைநிலமாகும். அதில் நல்லெண்ணங்களை மட்டும் விதைத்து விவசாயம் செய். அவற்றில் அனைத்தும் முளைக்கா விட்டாலும், ஒரு சிலவாவது முளைத்து நல்ல பலன் தரும், என்கிறார். எனவே நல்ல எண்ணங்களை, நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.