பதிவு செய்த நாள்
28
ஜூன்
2016
12:06
திருவள்ளூர் மாவட்டத்தில், பகுதிவாசிகள் நடத்தும் திருவிழாக்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என, மாவட்ட போலீஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆபாச நடன விவகாரம் தொடர்பாக, ஐகோர்ட் உத்தரவை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. மாதந்தோறும், ஏதாவது ஒரு கோவில்களில் கிராம தேவதையான அம்மனுக்கு விழா எடுப்பது கிராமத்தினர் வழக்கம். குறிப்பாக, ஆனி, ஆடி, புரட்டாசி மாதங்களில் அம்மன் கோவில்களில் கூழ் வார்த்து, தீமிதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு: தற்போது, கிராமங்களில் திரவுபதி அம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்போது, ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காலப்போக்கில் இந்த நிகழ்ச்சிகள் மாறி, ஆடல், பாடல் போன்று கவர்ச்சிகரமாக ஆண்கள், பெண்கள் ஆடுவது போன்று நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சினிமா பாடலை ஒலிபரப்பி, சினிமா துணை நடிகையர் உள்ளிட்ட பெண்களால், கவர்ச்சிகரமான நடனம் ஆடப்பட்டு வருகிறது. இதனால், பல கிராமங்களில் மோதல்கள் ஏற்பட்டன. இதுபோன்று மோதல்கள் ஏற்படும் நிலையில், பாதுகாப்பிற்காக, பல நாட்கள் பாதுகாப்பில் போலீசார் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏமாற்றம்: இந்நிலையில், மாவட்ட போலீஸ் நிர்வாகம், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், அறிவிப்பு பலகையில், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என, எழுதப்பட்டு உள்ளது.இதனால், எதிர்வரும் விழா நாட்களில், அம்மன் கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடு செய்துள்ள விழா குழுவினர் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
காரணம் என்ன?: இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:தென் மாவட்டங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடைபெறுகிறது. குறிப்பாக, நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், பெண்களை அனுப்பி விட்டு, ஆண்கள் மட்டுமே பார்வையாளராக வைத்து, ஆபாச நடனம் நடத்தப்படுகிறது. இதை, சிறுவர் முதல், முதியோர் வரை பார்த்து ரசிக்கின்றனர். இதனால், கலாசார சீர்கேடு ஏற்படுகிறது. இதையடுத்து, சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலால், இதுபோன்ற ஆபாச நடன, நிகழ்ச்சிகளை நடத்த, சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது. பொதுவாக ஆடல், பாடல் நிகழ்ச்சி என்றாலே, சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் தான் ஆடப்படுகிறது. இதனால், கலாசார சீர்கேடு ஏற்படுவதுடன், வன்முறைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உண்மையிலேயே, ஆபாசமில்லாத, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த விரும்பினால், ஐகோர்ட் விதிமுறைக்கு உட்பட்டு, நிகழ்ச்சி நடத்துவோம் என, விழா ஏற்பாட்டாளர்கள் உறுதிமொழி அளித்தால், மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்யும். வேண்டுகோள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனுமதி அளிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -