கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயில் ஆனி திருமஞ்சன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். இங்குள்ள பச்சை மரகத நடராஜருக்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஆரூத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் நடராஜர் வீதியுலா நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசித்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் சுப்பையா செய்திருந்தனர்.