சிவகங்கையில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2016 11:07
சிவகங்கை: சிவகங்கையில் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. ஜூலை 8 காலை 9:15 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு துாயதீப அலங்காரம், நெய்வேந்தியங்கள் நடந்தன. மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேகம் நடந்தன. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்கார நெய்வேத்தியங்கள் நடந்தன. மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் குழந்தையுடன் காட்சியளித்தார். தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்தல், பிள்ளைத்தொட்டி கட்டுதல், முடி இறக்குதல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு முழுவதும் விழா நடந்தது. நகரில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
* சிவகங்கை நேருபஜார் அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் பூக்கரக பூச்சொரிதல் விழா ஜூலை 5 காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. ஜூலை 10 ல் திருவிளக்கு பூஜை, ஜூலை 12 ல் பால்குடம், பூக்கரகம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தன. ஜூலை 13ல் முளைப்பாரி கரைத்தல், அன்னதானம் நடந்தன. நேற்று இரவு 8:30 மணிக்கு மின்னொளி பூ ரதத்தில் அம்மன் நகர் வலம் வந்தார். இரவு 12 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.