வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று திருக்கல்யாணத்தை யொட்டி அதிகாலை சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சன வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி வெண்பட்டு, தாயார் இருவரும் ஆரஞ்சு பட்டு அணிந்து மணமேடையில் எழுந்தருளினர். மாலை மாற்று வைபவமும், சடங்குகளும் முடிந்தவுடன் பெருமாள் தாயார் இருவருக்கும் மாங்கல்யம் அணிவித்து மணம் முடித்தார். பக்தர்கள் பூக்களை துாவியும் கோவிந்தா கோஷமிட்டும் வழிபட்டனர். அதனை தொடர்ந்து நலங்கு வைபவம், பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்பட்டது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்தனர்.