பதிவு செய்த நாள்
02
ஆக
2016
03:08
ராமேஸ்வரம்: ஆடி திருக்கல்யாண விழாவிற்காக, ஆக., 6 மற்றும் 12ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா, ஜூலை 27ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 11ம் நாள் விழாவான ஆடித் தபசு ஆக., 6ல் நடக்கிறது. அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து கால பூஜைகள் நடக்கும். காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டகப்படியில் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். அன்று மாலை 3 முதல் 4 மணிக்குள் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.ஆக.,12ல் அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் நடக்கும். அன்று காலை 6 மணிக்கு தங்க கேடயத்தில் கெந்தமாதன மண்டகபடிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். பின், அன்று இரவு 10 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறந்து, அர்த்தசாம பூஜைகள் முடிந்ததும் மீண்டும் கோயில் நடை சாத்தப்படும், என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.