பதிவு செய்த நாள்
19
செப்
2016
11:09
நாமக்கல் புரட்டாசி முதல் ஞாயிறு: புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். முன்னதாக, சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால், மஞ்சள், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு, நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு பஸ்கள்: தமிழ் மாதம், முதல் ஞாயிறு அன்று, பக்தர்கள் தாமதமின்றி ஆஞ்சநேயேர் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடும் வகையில், சேலம், ஈரோட்டில் இருந்து, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாமக்கல் நகரின் மத்தியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு, விஷேச நாட்களில், பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். குறிப்பாக, சேலம், ஈரோட்டில் இருந்து வரும் பக்தர்கள், குறித்த நேரத்தில் வரமுடியாததால், சுவாமிக்கு நடக்கும் அபிஷேகத்தை காணமுடியாத சூழ்நிலைக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு, தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வழிபாட்டில், பக்தர்கள் வந்து செல்லும் வழியில், சேலம், ஈரோட்டில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு இயக்கப்படுகிறது.