பதிவு செய்த நாள்
27
செப்
2016
11:09
சிக்கல்: சிக்கல் அருகே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன்கோயில் சிதிலமடைந்துவருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.
சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் உள்ளது பழைமை வாய்ந்த சிவன்கோயில். இங்கு சிவன் திருநாகேஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் பிரகாரம் 60 அடிவரை நீளம்கொண்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் ஆகியவை உள்ளது. கருவறையில் மேல்தளம் சிறிய அளவில் செங்கல்களை கொண்டு பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் வெளிப்புற சுவர்கள் அனைத்திலும் வட்டவடிவ சித்திர தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இவ்வூரின் பெயர், மூலவரின் பெயர், தானத்தின் தன்மை, தானப்பொருள், பிற ஊர்களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. கோயிலின் அருகில் 5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோயில் குறித்து மேலக்கிடாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறியதாவது: தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்ட இக்கோயில், கி.பி., 1236ல் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். செம்மண் பகுதி நிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு, வண்ண பானை ஓடுகள் கண்டறியப்பட்டு, அவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சியக்காக வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் மாதிரி பிரதிகளை படியெடுத்து வைத்துள்ளோம். கோயிலின் வடக்கு பகுதியில் உடும்பு, ஆமை, மீன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. 1905ல் பிரிட்டிஷ் அரசால் வெளியிடப்பட்ட பழமையான கோயில்கள் குறித்த வரலாற்று ஆவணத்தில் இக்கோயிலின் வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சிவராத்திரி அன்று மட்டும் காலை 7 முதல் 9 மணி வரை மூலவர் சிவலிங்கம் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. கலை நுணுக்கத்துடன் எழுப்பப்பட்ள்ள இக்கோயிலில் பீடம் இல்லை. அம்மன் சிலை சுவற்றில் சாய்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் விமானம் சிதிலமடைந்து வருகிறது. 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலை திருப்பணிகள் மூலம் பாதுகாக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் அரசு முன்வரவேண்டும், என்றார்.